ஜனாதிபதியிடம் நீதி கேட்டு மன்றாடிய ரிஷாட்

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதியிடமும் நீதிக்கேட்டார்.

பாராளுமன்றத்துக்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபை நடவடிக்கை​களை சிறிதுநேரம் அவதானித்தார்.

இதன்போது, ரிஷாட் பதியூதீன் எம்.பி உரையாற்றினார்.

சி.ஐ.டி யில் 102 நாள்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன். எனினும், வெறுமனே 5 நாள்கள் மட்டுமே என்னிடம் விசாரணை செய்துள்ளனர் என்றார்.

ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்த என்னிடம் வெறும் 5 நாள்கள் மாத்திரமே விசாரணை செய்தார்கள். ஆனால், 102 நாள்கள் நான் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என்றார்.

“ஏனைய 97 நாள்களும் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டுள்ளது. மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றுவரை, எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்” என்றார். .

ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்த போது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை ஜனாதிபதி அவர்களே. வேறு எந்தக் காரணமும் இல்லை என ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *