இலங்கையில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறவிடப்படும் 4,000 ரூபா காப்புறுதி நிதியை 713 ரூபாவாக அரசாங்கம் குறைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் காப்புறுதியை குறைப்பதற்கு ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகராஜன், எஸ்.ஆனந்தகுமார் ஆகியோர் அரசாங்கத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இம்மாத இறுதியில் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விசா கட்டணத்துக்கு மேலதிகமாக 4000 ரூபா காப்புறுதி நிதியும் செலுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது என அவர் கூறினார்.
குறித்த நிதியை குறைந்தளவில் அறவிட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய உதவி உயர்ஸ்தானிகர், பௌத்த கலாசார திணைகளத்தின் செயலாளர் உட்பட உரிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
குறித்த பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் காப்புறுதி நிதியை 713 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.