செல்வச் சந்நிதி முருகன் திருவிழா; இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் வெளியானது அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்திதி முருகன் வருடாந்த திருவிழா தொடர்பில் இன்று வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்று இறுக்கமான தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரத் தரப்பினர், பொலிஸ் அதிகாரிகள், ஆலய அறங்காவலர் சபையினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அதன் அடிப்படையில்,

ஆலய வழிபாட்டில் பங்குகொள்ள 100 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் அனுமதிக்கப்படுபவர்கள் குறித்த விபரங்கள் முன்னதாகவே சுகாதாரத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

அத்தோடு ஆலயத்தின் மூன்று வாசல்களிலும் பொலிஸாரால் வீதித் தடை போடப்பட்டு உள்ளே செல்பவர்கள் குறித்து இறுக்கமாக அவதானிக்கப்படும்.

மேலும் ஆலயச் சூழலில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள், ஆலய அறங்காவலர் சபையினர், பூசர்கள், ஆலயத்தில் கடமையில் உள்ள ஏனையவர்கள் சகலரும் நாளை பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்கவேண்டும்.

எனினும் அதில் கிடைக்கும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கொவிட் தொற்றில்லை என்று அடையாளம் காணப்படுபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.பிசிஆர் பரிசோதனைக்கு உட்படாதவர்கள் வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்படும்.

மேலும் குறிப்பாக வெளியிலிருந்து வரும் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அழுத்தம் திருத்தமாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் அருவிக்குத் தெரிவித்தனர்.

Leave a Reply