மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு! வியாபாரிகள், மக்கள் பாதிப்பு

தற்போது மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய கஷ்டத்தினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் சில்லறை விலை 1,280 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி, தக்காளி மற்றும் கரட் சில்லறை விலை 440 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸ் சில்லறை விலை 300 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் வெங்காயம் சில்லறை விலை 250 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் சில்லறை விலை 400 ரூபாயாகவும், அத்தோடு நாட்டு மரக்கறிகளின் விலை அதிகரித்த வண்ணம் காணப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளையில் இருந்து அதிமான விலையில் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு வந்து சிறிய இலாபத்தினை வைத்து வியாபாரம் செய்கின்றோம்.

அதிலும் பல மரக்கறிகளில் கழிவுகள் ஏற்படும் பட்சத்தில் எமக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதுடன், நாளுக்கு நாள் மரக்கறிகளின் விலைகள் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படும் நிலையில், நாளாந்த கூலி தொழில் செய்யும் மக்கள் ஐம்பது ரூபாய் மற்றும் நூறு ரூபாய்களுக்கு மரக்கறிகளை கேட்கும் போது எங்களால் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் குறித்த பணத்திற்கு சிறிய அளவிலான பொருட்களை வழங்க கூடிய நிலைமை காணப்படுவதுடன், எமக்கு பாரிய நஷ்டத்தினை ஏற்படுத்தி செல்கின்றது.

மரக்கறிகளின் விலைகளில் தொடர்ச்சியாக விலைகள் அதிகரித்த வண்ணம் காணப்படும் பட்சத்தில் பொதுமக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்து உண்ண முடியாத நிலை ஏற்படும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *