எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ஐக்கிய இளைஞர் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம், கொழும்பில் உள்ள வலுசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒரு மணித்தியாலம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
இந்த ராஜபக்ஸர்களின் அரசாங்கமானது, எரிபொருள் விலையை அதிகரித்து மக்களுக்கு கூறிய பொய்களை வெளிப்படுத்தியுள்ளது.
பொருட்களின் விலைகளை குறைத்து செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம் என்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் யாருக்கும் தெரியாத நேரத்தில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நான்கு நாட்கள் இருக்கும்போதே எரிபொருட்களின் விலையை அதிகரித்து நாட்டு மக்களை மேலும் படுகுழிக்குள் தள்ளியுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்துடன் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்து செல்கின்றன என தெரிவித்துள்ளனர்.