கிளிநொச்சி மாவட்டத்தில், மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தரமற்ற உரங்களை பயிர்களுக்கு இட்டிருப்பதாகவும், இதனால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட விவசாய குழுக் ;கூட்டம் இன்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பிலும், சட்ட ரீதியற்ற பயிர் செய்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இரசாயன உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பல்வேறு வகையான உரங்களையும் மிகக்கூடிய விலைகளில் பெற்று பயிர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது மக்னீசியம் சல்பேற் என்ற உரத்தை அமோனியம் சல்பேற் என சிலர் விற்பனை செய்கின்றார்கள். விவசாயிகள் இவ் உரத்தை வயலில் பயன்படுத்தியுள்ளார்கள் என விவசாய அமைப்புக்ளினன் சம்மேளத்தின் செயலாளர் முத்து சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாய அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு அறிவிப்புகளை வழங்குவதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், மாவட்ட துறைசார் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
