அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை – கரு கண்டனம்

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் முடிப்பதாக இருந்தால் அதற்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதிவாளர் நாயகத்தினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு பிரஜைகளின் சுதந்திரத்தை வரையறுப்பதற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த தீர்மானத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இது அரசாங்கம் எடுத்திருக்கும் தான்தோன்றித்தனமான நடவடிக்கை என்பதுடன் அருவருக்கத்தக்க செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அரச நிர்வாகம் என்பது அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் அமையவேண்டுமே தவிர, குடும்பங்களின் சாதாரண நிலைமைக்கு சட்டம் அமைக்கும் செயற்பாடு அல்ல என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் திருமணம் முடிக்கும் சுதந்திரத்துக்கு ஏற்றவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய வரையறையானது, இலங்கை பிரஜைகளை இரண்டு முறைகளில் நடத்துவதற்கான அடித்தளம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *