
வவுனியா, செட்டிகுளம், தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பனைக்குளத்தைச் சேர்ந்த ஹரிந்து கோசல்யுஸ் வெத்தியாராச்சி (வயது-24) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குளத்துக்குச் சென்றவர்கள், குளத்தில் சடலம் ஒன்றை அவதானித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டனர்.
இந்த இளைஞர் நேற்று நண்பர்களுடன் இணைந்து குளிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றார் என்றும், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.