
பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நேற்று ஹரிஸ்பத்துவவில் அமைந்துள்ள அங்கும்புர நகர அபிவிருத்தித் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சிந்தித்து குறைந்தபட்ச திருத்தத்துக்காகச் செல்ல வேண்டும். இந்த மாற்றம் மீள் திருத்தத்துக்கு உட்பட்டதாகவே அமையும். அடுத்த வாரம் சில கட்டணத் திருத்தங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படும். இந்த மாற்றங்கள் விருப்பத்துடன் செய்யப்படுபவை அல்ல.
எரிபொருள் விலை குறைவு மற்றும் அமர்ந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும்போது மீண்டும் கட்டணம் குறைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். எதிர்வரும் புதன்கிழமைக்குள் பஸ் கட்டணத்தில் சிறிது உயர்வு ஏற்படும்.- என்றார்.