இலங்கையில் உள்ள ஆசிரியர் – அதிபர்கள், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்களை தொடந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், “ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது. அதற்கு அரசு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயாளர் ஜோசப் ஸ்டாலினை இந்த அரசு துரத்திக்கொண்டு திரிகின்றது. அவருக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் அதற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
-என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தற்போதைய நெருக்கடியைக் கையாள சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஊடாக ஆசிரியர் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையையும் கல்வி அமைச்சே உருவாக்கியிருந்தது.
மேலும் , சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே ஆசிரியர் சங்கங்கள் கேட்கின்றன.
அதுமட்டுமின்றி, இந்த நாட்டின் முன்பள்ளி ஆசிரியர்களை சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் வைத்துள்ளனர்.
இதேவேளை, ‘இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கையே. இதுதான் ஆசியாவின் ஆச்சரியம்’ என மேலும் தெரிவித்தார்.