கிராமிய மட்டத்திலிருந்தே சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்களை வேலைகளுக்கு அமர்த்துவது தொடர்பில் சேகரிக்கப்பட்டு இருக்கும் தரவுகளுக்கு அமைய, அவர்களில் அதிக சதவீதத்தினர் பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
வீடொன்றில் சிறுவர் இல்லாதுவிடின் அதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு சிறுவர்கள் வேலைக்கு அமர்ததுவது தடுக்கப்படும்.
சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, அதனை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தனியான இராஜாங்க அமைச்சும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களுக்கு அடிமையான சிறுவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதுடன், மீள அவற்றை பயன்படுத்துவதற்கு ஏதுவான காரணிகளையும் கண்டறிய வேண்டும்.
துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படக் கூடும் என சந்தேகப்படக்கூடிய சிறுவர்கள் உள்ள குடும்பங்கள் குறித்து முற்கூட்டியே அறிந்து, அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.