திருகோணமலை, தோப்பூர் – நல்லூர் பகுதியில், தூக்கில் தொங்கி, உருக்குலைந்த நிலையில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் – நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய பொடி அப்புக்காமி விஜயதாச என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்தார். இவரை குடும்பத்தினரும், கிராம மக்களும் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நல்லூர் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில், அவர் காணப்பட்டதை அவதானித்த பொதுமக்கள் சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து, சம்பூர் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியாத நிலையில், சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.