நாட்டின் சாபக்கேடுகள் நீங்கி, கொள்ளைக்கார கட்சிகளிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும் என்றால் ஜே.வி.பியுடன் மக்கள் இணைய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட பொறுப்பாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, சுதந்திர கட்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இருந்தாலும் சரி எல்லாரும் தங்களை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தார்கள். மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களின் பலம் குறையும் போது, நாடு வீழ்ச்சி ஆடையும். அப்போது அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி ஏற்படும்.
இனவாதம், மதம் ஆகியவற்றை காரணம் காட்டி ஆட்சி பீடம் ஏறியவர்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை மறந்து விட்டனர்.
இதனை உணர்ந்த மக்கள் சஜித் அணியை தூக்கி எறிந்து விட்டு, ராஜபக்ச அணியை புறம் தள்ளிவிட்டு ஜே.வி.பியுடன் இணைந்துள்ளனர்.
மக்களுக்கு தெரியும் யார் கள்ளர் என்று. ஆகவே, இம்முறை என்றாலும் 73 வருட சாபத்தை விடுத்து, ஜே.வி.பியை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு மக்கள் தயாரிகி விட்டனர்.
நாம் தேசிய மக்கள் சக்தியாக பலம் பெற்றுள்ளோம். இது மாத்திரம் அல்ல வெளிநாட்டு தூதுவர்களும் எம்முடன் கலந்துரையாட ஆரம்பித்துள்ளனர்.
இவ்வளவு காலமும் நீங்கள் தமிழ் கட்சிகள் என்ற புரோக்கர்களுக்கு வாக்களித்தது போதும். அது டக்ளஸ், அங்கயன், சுமந்திரன் அணி யாராக இருந்தாலும் சரி அவர்கள் உங்கள் வாக்குகளை வாங்கி ராஜபக்ச மற்றும் ரணில் அணிக்கு விற்றார்கள். அதற்கு தமிழ் மக்கள் பலியானார்கள். ஆகவே இம்முறை எங்களோடு இணையுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.