ஒரு திருச்சபைத் தலைவராக, நிறவெறிக்கு எதிரான போராளியாக, மனித உரிமைச் செயற்பாட்டளராக, சமாதானத்திற்கான நோபல் பரிசைப்பெற்றவராக பேராயர் டெஸ்மன்ட் டுட்டு உலகெங்கும் அறியப்பட்டவர். இவர் கடந்த நேற்றுமுன்தினம் 26ஆம் திகதி தனது 90ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
நிறவெறிக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டவர் பேராயர்
தென்னாபிரிக்க நாட்டின் அங்கிலிக்கன் திருச்சபைப் பேராயரான இவர் தென்னாபிரிக்காவின் சிறுபான்மையினரான வெள்ளை இனத்தவரின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக 1980களில் சாத்வீக வழியில் தீவிரமாகப் போராடிய துணிவுமிக்க ஒரு திருச்சபைத் தலைவர். 1984ஆம் ஆண்டு இவர் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.
தனது சொந்த நாடாகிய தென்னாபிரிக்காவில் தான் சார்ந்த கறுப்பினத்தவரின் உரிமைக்காக மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் குரல்கொடுத்தார். எயிட்ஸ், காசநோய், தற்பாலினர் வெறுப்பு, திருநங்கை இனத்தினர், வறுமை, இனப்பாகுபாடு ஆகிய துறைகளில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். இவர் ‘தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’த் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 1931ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி பிறந்தார். கிங்ஸ் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்விகற்றார். 1955ஆம் ஆண்டு நொமொலீசோலியா சென்கான் என்ற பெண்ணை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளுக்கு தந்தையானார். இவர் தென்னாபிரிக்க அங்கிலிக்கன் திருச்சபையின் குருவாக 1961ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டார். 1976ஆம் ஆண்டு ஆயராக உயர்த்தப்பட்டார். கேப் ரவுன் மறைமாவட்டத்தின் ஆயராக 1986 தொடக்கம் 1996 வரை பணியாற்றியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் குரலாகவும்
ஒலித்துள்ளார் பேராயர் டுட்டு
பேராயர் டுட்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இவர் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் குறித்து நன்கு அறிந்திருந்தார். தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை அறிந்திருந்தார். சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள சமூகம் தமிழ் மக்களுக்கான சமூக உரிமைகளை வழங்கத் தவறிவிட்டது என இவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். கேப் ரவுணில் வெளியிட்ட அறிக்கையொன்றில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் ‘தமிழ் கார்டியன்’ என்ற ஏடு 1997ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது.
2008ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவுசெய்யப்படுவதை நிராகரிக்குமாறு இவர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் உட்பட மூன்று கண்டங்களைச் சேர்ந்த நோபல் பரிசுபெற்ற பிரமுகர்கள் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
தென்னாபிரிக்காவின் டெஸ்மன்ட் டுட்டு, ஆர்ஜன்ரீனாவின் அடொல்போ பெரஸ் எஸ் கியூவன், அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் பரிசுகளை வென்றெடுத்த மூன்று பிரபலமானவர்களே இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகளின் அடிப்படையில் பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவுசெய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். லண்டன் ‘த கார்டியன்’ பத்திரிகையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தென்னாபிரிக்கப் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு தெரிவித்திருந்த விமர்சனம் வெளியாகி இருந்தது.
இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்படும் கிரமமான மனித உரிமை மீறல்கள் மிகவும் பாரதூரமானவை எனவும், பரந்தளவில் சித்திரவதைகளும் நீதி விசாரணைக்கு புறம்பான படுகொலைகளும் இடம்பெற்றிருப்பதாகவும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசே பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருந்த பேராயர், மனித உரிமை பேரவை உறுப்பினராக இலங்கை தேர்ந்தெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மனித உரிமைகளுக்கான
தீவிரமான போராளி
இவருடைய மனித உரிமைச் செயற்பாடுகளுக்காகவும், சாத்வீகப் போராட்டுடங்களுக்காகவும் பல சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார். நோபல் பரிசைவிட இன்னும் சில பரிசில்களும் இவரைத் தேடிவந்தன. 1986ஆம் ஆண்டு மனிதத்திற்கான அல்பேர்ட் சுவைட்சர் பரிசையும், 1987ஆம் ஆண்டு பாசெம் இன் டெர்ரிச பரிசையும், 1999ஆம் சிட்னி அமைதிப் பரிசையும் 2005அம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார். 2009ஆம் ஆண்டு இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டது. தனது மேடைப் பேச்சுக்களையும், மேற்கோள்களையும் பல நூல்களாகத் தொகுத்துள்ளார்.
பேராயர் டுட்டுவின் மரணத்தை உறுதிசெய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஸ, கேப் ரவுணில் பேராயரின் உயிர் அமைதியாகப் பிரிந்ததாகக் கூறியுள்ளார். விடுதலைபெற்ற தென்னாபிரிக்காவை மக்களுக்கு வழங்கியவராக டெஸ்மண்டு டுட்டு வரலாற்றில் பதிவாகியுள்ளார் என்று தென்னாபிரிக்க ஜனாதிபதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெஸ்மண்ட்டு டூட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அறியப்பட்ட தென்னாபிரிக்காவின் சிறந்த நபர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். நாட்டின் கறுப்பின பெரும்பான்மையினருக்கு எதிரான வெள்ளையினத்தவர்களின் கொடூரமான ஒடுக்குமுறையை அவர் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். தென்னாபிரிக்காவின் வெள்ளை இனத்தவரின் சிறுபான்மை ஆட்சிக்கு எதிராக வன்முறையற்ற எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டார். உறுதி, கருணை, பிறர் நலனில் அக்கறை கொண்டவராக இவர் திகழ்ந்தார் என தென்னாபிரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியில், ‘முன்னாள் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவர். மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான அவரது வலியுறுத்தல் என்னென்றும் நினைவில் கொள்ளத்தக்கது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டவரால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள்பற்றி விசாரிக்க ஐ.நா.வால் அனுப்பப்பட்ட குழுவுக்கு ஒரு யோசனை சொன்னார். ‘நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப்பெறுங்கள். இதனால் இழப்பு எங்களுக்குத்தான். அது அற்புதமான நோக்கத்திற்கான இழப்பு’ என்றார்.
பேராயர் டெஸ்மன்ட் டுட்டு ஆயர், இறையியலாளர், சமூக செயற்பாட்டாளர், நூலாசிரியர் என்று பன்முக ஆளுமையைக் கொண்டவர். இவர் நீதியின் குரலாக ஒலித்தவர். உற்சாகமூட்டும் உரையாளராகத் திகழ்ந்தார். சிறந்த நகைச்சுவையாளராகவும் விளங்கினார். இவருடைய பெருவாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.