
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கிலுள்ள கோவில்களில் விக்கிரகங்களைக் கடத்தி விற்பனை செய்துவந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 05 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டது.
வலிகாமம் வடக்கு பிரதேசத்திலுள்ள கோவில்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்துக் கடவுளர்களின் விக்கிரகங்களை கடத்தி, கொழும்பில் விற்பனைசெய்துவந்த குற்றச்சாட்டில் கீரிமலை நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர்-நவக்கிரிப் பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த 24 ஆம் திகதி காங்கேசன்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அச்சுவேலி, பலாலி, தெல்லிப்பழை, மானிப்பாய், சுன்னாகம், இளவாலை, காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கோவில்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த 09 ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், கொழும்புக்கு கடத்தி விற்பனை செய்யப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கொழும்புக்கு விரைந்த பொலிஸ் குழுவினர் அங்கு விற்பனை செய்யப்பட்ட 20 சிலைகளை கடந்த 25 ஆம் திகதிமீட்டு வந்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிவானிடம் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்பட்டனர். அதன்போதே, அவர்களை எதிர்வரும் 05 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விக்கிரகங்கள் திருடப்பட்டமைக்கும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், இராணுவச் சிப்பாய்கள் இருவருக்கும் தொடர்புள்ளதென்று பொலிஸார் கூறியிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.