இந்தியா, சீனாவுடனான ஒப்பந்தங்கள் மூலம் அந்நிய செலாவணி நெருக்கடி தணியும்! ஜனாதிபதி நம்பிக்கை

இந்தியா மற்றும் சீனாவுடனான ஒப்பந்தங்கள் இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியைத் தணிக்க உதவும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீனா உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த ஒப்பந்தங்களில் பயனாக இலங்கையில் டொலர் கையிருப்பு 3 பில்லியன் டொலருக்கு மேல் உயரும் என டெய்லி பினான்சியல் டைம்ஸ் ஆசிரியர் குழாமினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தொற்றுநோய் மற்றும் அதன் தாக்கங்கள், சுற்றுலா வருமானத்தில் 10 பில்லியன் டொலர் இழப்பு உள்ளிட்ட நெருக்கடிகள் இருந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 பில்லியன் டொலர் கடனை இலங்கை வெற்றிகரமாக செலுத்தியது.

உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி, இறக்குமதியைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், நிலையான பசுமை விவசாயம் உள்ளிட்ட திட்டங்களை செயற்படுத்தும் போது விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்.

சவால்கள் இருந்தபோதிலும் ஏற்கனவே இந்த மூன்று துறைகளிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டங்களின் முழுமையான பயனை அடைய முடியும்.

கொரோனாப் பெருந்தொற்று நோய் மற்றும் அதன் விளைவுகள் தனது அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை.

எனினும், விரைவாக தடுப்பூசித் திட்டம் மூலம் கொரோனா இறப்புகளையும் மோசமான பேரழிவையும் தனது அரசாங்கம் வெற்றிகரமாக குறைத்தது.

கொரோனாத் தொற்று நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பொருளாதாரத்தில் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கிறிஸ்துமஸ் நாளில் கிட்டத்தட்ட 5,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை 75,000 வரை அதிகரிக்கும். இது கொரோனாவுக்குப் பிந்தைய சாதனை அதிகரிப்பாக அமையும்.

தான் பதவியேற்றபோது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 7 பில்லியன் டொலர்களாக இருந்தது.எனினும் இலங்கை ஆண்டுக்கு 6 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டி இருந்தது.

இதற்கிடையே, தொற்றுநோய் நெருக்கடியை யாரும் பார்க்கவில்லை. இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் பாரிய சரிவு ஏற்பட்டது. இதனால் நாடு 10 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருவாயை இழந்தது.

அதற்கு மேல் நாட்டில் ஏற்றுமதிகள் பின்னடைவைச் சந்தித்த வேளை, எங்களின் பணப்பரிமாற்றங்களும் குறைந்தன.

இந் நிலையிலேயே அந்நியச் செலாவணி கையிருப்பை பேணும் நடவடிக்கையாக, வாகனங்கள், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி தடையை விதிக்க வேண்டியேற்பட்டது. இதற்கு இணையாக, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

இந்த நடவடிக்கையால் உள்ளூர் கரும்பு விவசாயிகள் பயனடைகிறார்கள். சீனித் தொழிற்சாலைகள் உத்வேகத்துடன் செயல்படுகின்றன. பால் பண்ணையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது.

இது ஒரு பெரிய மாற்றமாகும். எனினும் இந்த நன்மைகளை யாரும் முன்னிலைபடுத்தவில்லை.

இறக்குமதி தடை காரணமாக ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நான் புரிந்துகொள்கிறேன். எனினும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தவிர்க்க முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை! தவறுக்கு மன்னிப்பு கோரினார் தவிசாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *