அரசின் திடீர் அறிவிப்பால் மக்களும், கிராமிய பிறப்பு இறப்பு விவாக பதிவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிறப்பு இறப்பு விவாக பதிவாளர் சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் திருமதி. வரதலக்சுமி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் குறியுரிமை கொண்ட ஒருவருக்கு கிராமிய பதிவாளர்களால் பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியாது என்று அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
ஆனாலும், நாம் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் நபரின் கடவுச் சீட்டு, வீசா, விகாரரத்து இருந்தால் அதற்கான பத்திரம், பிறப்புச் சான்றிதல் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசீலினை செய்த பின்னரே விவாகம் பதிவு செய்வோம்.
இந்த நிலையில், இனிவரும் காலங்களில் மாவட்ட பதிவாளர்கள் மாத்திரமே வெளிநாட்டிலிருந்து வருகை தரும் நபர்களின் விவாகம் பதிவு செய்ய முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் நாம் மனம் நொந்துள்ளோம். மக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
திருமணத்துக்கு நாள் நேரம் முக்கியம். ஒரே நாளில் அதிக திருமணங்கள் நடைபெறும். இந்த நிலையில் எப்படி மாவட்ட பதிவாளர் உரிய நேரத்துக்கு சென்று பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து திருமணத்துக்காக, நத்தார் விடுமுறையில் அதிக பேர் இங்கு வருகை தந்துள்ளனர்.
நொத்தாரிசு போடப்பட்டால் அது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். ஆகவே எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு என்றாலும் நொத்தரிசு போடப்பட்ட விவாகங்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.