எரிவாயு வெடிப்பில் எரிந்த வீட்டை பார்வையிட்ட அலிசப்ரி எம்.பி!

புத்தளம் – கற்பிட்டி குரக்கான்சேனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்ததில் முழுமையாக எரிந்த வீட்டை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று காலை பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது கற்பிட்டி சக்காத் ஒன்றியத்தினர் உட்பட சிலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அலிசப்ரி ரஹீம், அவர்களுக்கு தேவையான முதற்கட்ட உதவிகளை செய்துகொடுப்பதற்காக கற்பிட்டி சக்காத் ஒன்றியத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதாக தெரிவித்தார்.

அத்தோடு, இன்னும் ஓரிரு நாட்களில் தற்காலிக வீட்டின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஆலோசனை கூறினார்.

சக்காத் ஒன்றியத்தினல் இந்தக் குடும்பத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்றால் தன்னுடன் தொடர்பை மேற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் விஷேட வீடமைப்புத் திட்டத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தை உள்வாங்கி அவசரமாக புதிய வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்.

இதுபற்றி, வீடமைப்பு அதிகார சபை, கற்பிட்டி பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் தொலைபேசி மூலமாக கலந்துரையாடி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

தற்காலிக கூடம் ஒன்றில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்கள், சமைத்து உண்பதற்கு தேவையான பொருட்கள் என்பனவற்றையும் அவசரமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் கற்பிட்டி சக்காத் ஒன்றியத்திடம் கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் கற்பிட்டி சக்காத் ஒன்றியத்தினரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புவோர் சக்காத் ஒன்றியத்தின் ஊடாவே முன்னெடுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் இருவருக்கு மட்டுமே சிறிய எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பு ஊடாக நீரை சூடாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த அடுப்பு திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதுடன், வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதையில் இருந்த இரு பொலிஸார் பணி இடைநீக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *