வெடிபொருள்கள் மீட்பு!

கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலையின் பின்பகுதியிலுள்ள காணியிலேயே இவை மீட்கப்பட்டன.

கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த வெடிபொருள்கள் தொடர்பில் பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் வழங்கப்பட்டது.
அதனையடுத்து, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவத்தினர் இணைந்து குறித்த அகழ்வுப் பணியை நேற்று மேற்கொண்டனர்.

அதன்படி, 12.7 ரக துப்பாக்கி – 01, அதற்குரிய ஸ்ரான்ட் – 02, ஆர்.பி.ஜி. துப்பாக்கி – 03, ரி 57 ரக துப்பாக்கி – 06, ரி 81 ரக துப்பாக்கி – 03, ஆர்.பி.ஜி. செல் – 10, இயக்க தாமத கடத்திகள் – 11, அணைக்கட்டு தகர்க்கும் ஆயுதம் – 05, எல்.எம்.ஜி. ரவைகூடு – 09, 12.7 துப்பாக்கி கூடு 01, எம்.பி.எம்.ஜி. கூடு – 01, 12.7 ரவை செயின் – 08 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் துருப்பிடித்துக் காணப்படுகின்றன. அவை செயற்றிறன் உள்ளவையா என்பது தொடர்பில் ஆய்வுசெய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக செயலிழக்க வைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெடிபொருள்கள் மீட்கப்படும் தனியார் காணியில் முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் காணப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *