பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அடுத்த வாரம் டுபாயில் இடம்பெறவிருந்த EXPO கண்காட்சிக்கான விஜயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்போவில் இலங்கைக்கான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜனவரி 3 ஆம் திகதி நிகழ்வின் பிரதம அதிதியாக வருகை தருமாறு டுபாய் ஆட்சியாளரான மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமினால் பிரதமர் ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டுபாய் எக்ஸ்போ நிகழ்வில் பிரதமர் ராஜபக்ஷ வின் வருகை இலங்கையின் கலாசாரத்தின் செழுமையையும் நாட்டின் சாதனைகளையும் உண்மையான உலக அரங்கில் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை பிரதிபலிக்கிறது என பிரதமருக்கு டுபாய் ஆட்சியாளர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமரின் தலைமை அதிகாரியான யோஷித ராஜபக்ஷ தெரிவிக்கையில்,
நாட்டின் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் பிரதமர் ராஜபக்ஷ அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட டுபாய் பயணத்தை இரத்து செய்துள்ளார்
எமது வெளிநாட்டு கையிருப்புகளும் 3 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதால், அடுத்தாண்டு முதல் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் பாதையில் திரும்பும் என பிரதமர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
உள்நாட்டில் உள்ள சிக்கல்களால் அவரால் தற்போது விஜயம் செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.