வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் வெளிப்பாடாக கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில், இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் 265 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை நீடித்தால், எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் அபாய நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது வாழ்விடங்கள், பணியிடங்கள் உட்பட பொது இடங்களையும் சுத்திகரித்து, நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை அழிக்க வேண்டும் – என்றார்.






