டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகளால் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளனது.
உலகில் கொரோனா சுனாமி அலையொன்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் நாளாந்த கொரோனா தொற்று உறுதியாளர் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்துச் செல்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டொக்டர் டெட்ரெஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் நாளாந்த கொரோனா தொற்று உறுதியாளர் சராசரியானது 2,65,427 என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவில் தொடர்ச்சியாக கூடுதல் எண்ணிக்கையிலான நாளாந்த தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருவதாகவும், பிரான்ஸில் ஒரே நாளில் 2,08,000 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டென்மார்க், போர்துகல், பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் தொடர்ச்சியாக நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கொரோனா சுனாமியாக அடையாளப்படுத்த முடியும். தற்பொழுது நாளாந்தம் 900,000 கொரோனாத் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாத் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இரண்டு திரிபுகளும் ஏதுக்களாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.