
ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும், மக்களுக்கு மந்த போஷாக்குமே உரித்தாகியுள்ளது – என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடிய நாடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை கொண்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடு என்ற சாதனையை இலங்கை பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மக்கள் குறையை கேட்டறியும் ‘மனிதாபிமான சுற்றுலா’வின் நான்காம் நாள் பயணத்தை சூரியவெவ நகரில் நேற்று ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்தார்.
குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’ என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வைத்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் மதவாதம், இனவாதம் போன்ற பொய்களைக் கொண்டே வெற்றி பெற்றது. ஒரு காட்போர்ட் தேசபக்தியை உருவாக்கி, சிங்கள பௌத்த சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு, இனவாதத்தையும், மதவாதத்தையும், தீவிரவாதத்தையும், பொய்யையும் பரப்பியது இந்த அரசாங்கமே.
இரண்டு வருடங்களில் அரசாங்கம் நம் நாட்டை கண்ணீரில் மூழ்கும் ஒரு தேசமாக மாற்றிவிட்டது.
அது மாத்திரமன்றி இன்று இந்த நாடு பஞ்சபூதங்களையும், தேசிய வளங்களையும் விற்பனை செய்யும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது – என்று தெரிவித்தார்.