தடுப்பூசி தொடர்பில் மன்னார் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மன்னாரில் கடந்த யூலை மாத தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு நாளை மறுதினம் (09) திங்கட்கிழமை முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் கடந்த ஜூலை மாதம் 5, 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி நாளை மறுதினம் (09) திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு உட்பட்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மற்றும் பேசாலை சென் மேரிஸ் கல்லூரி ஆகியவற்றில் திங்கட்கிழமை (09) காலை 8 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரையும் எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணி வரையும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திங்கட்கிழமை (09) காலை 8 மணி முதல் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது.

அதேபோல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) மடு ஆலயத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலை மற்றும் இரணையிலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை ஆகியவற்றில் காலை 8 மணி முதல் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *