தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணம் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா, அண்மையில் நோயுற்றுத், தற்போது குணமாகி வரும் நிலையில், அவரின் மனைவி கலாநிதி (திருமதி) தயாளினி தியாகராஜாவினால் பேராயருக்கு மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுமுறை வழங்கும்படி கோரி சென்னையில் இருக்கும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டுக்கு (Synod) எழுதப்பட்ட விண்ணப்பத்துக்கு இணங்கப் பேராயர் தியாகராஜாவிக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு விடுப்பு வழங்க சினோட் தீர்மானித்துள்ளது.
அத்துடன் பேராயர் டானியல் தியாகராஜா தானாகவோ அல்லது தன்னால் நியமிக்கப்பட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் மூலமாகவோ திருச்சபை விடயங்களில் பணியாற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டிருப்பதுடன், அந்தக் காலப்பகுதியில் திருச்சபையினது நிருவாகப் பொறுப்புக்கள் யாவும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டின் தலைமை அலுவலகாரியினாலேயே (Moderator’s Commissary) மேற்கொள்ளப்படும் எனவும் சினோட்டினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், தென்னிந்தியத் திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் ஆதீனத்தின் பேராயராகக் கடமையாற்றும் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி எம் ஜோசேப், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனத்துக்கான தலைமை அலுவலகராக நேற்று இன்று டிசெம்பர் 30ஆம் திகதியில் இருந்து மறு அறிவித்தல் வரை செயலாற்றுவார்.
பேராயர் டானியல் தியாகராஜா மீண்டும் செயற்படுவதற்கு இயலுமான நிலையினை எய்தும் வரைக்கும் அவர் கடமை ஆற்றுவார்.
பேராயர் தியாகராஜா தொழிற்பட ஆரம்பித்ததன் பின்னர் தலைமை அலுவலர் மீளப் பெறப்படுவார்தலைமை அலுவலகர் யாழ்ப்பாணம் ஆதீனத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் காலப் பகுதியில், அவருக்கு ஒத்துழைப்பினை வழங்கும்படி ஆதீனத்தின் அலுவலர்கள், ஆதீன சபை, ஆதீனத்தின் நிர்வாகிகள் மற்றும் சபைகள் யாவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
மேற்கூறிய விவரங்களை உள்ளடக்கிய 30 டிசம்பர் 2021 திகதியிடப்பட்ட கடிதம் தலைமை அலுவலகரின் (Moderator) அதி வணக்கத்துக்குரிய தர்மராஜ் இராசாலமினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் யாழ்ப்பாணம் ஆதீனத்தின் அலுவலர்களுக்கும், பேராயர் டானியல் தியாகராஜாவின் பாரியார் கலாநிதி தயாளினி தியாகராஜாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.