இனஅழிப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை பட்டதிருவிழாவிற்கு அழைப்பது, எமது இனத்திற்கு நாமே இழைக்கும் வரலாற்றுத் தவறு: வல்வை ஒன்றியம் கண்டனம்!

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் வல்வையில் இடம்பெறவுள்ள பட்டத் திருவிழாவிற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஜேர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் வல்வை ஒன்றியம் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தில் இதுவரைகாலமும் வெகுசிறப்பாக நடாத்தப்பட்டு வந்த தமிழர் திருநாள் நிகழ்வான பட்டத்திருவிழா நிகழ்வை, எதிர்வரும் 2022 இல் தமிழர் நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருப்பது சினத்தையும் வேதனையையும் தருவதாக உள்ளது.

நீண்டகாலத் தமிழின அழிப்பை நடாத்தியும், தமிழர்களது பூர்வீக நிலங்களை முறையற்ற விதத்தில் பறித்தெடுத்தும், எண்ணில் கணக்கற்ற தமிழர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்றபெயரில் சிறையிலடைத்தும் தனது அடக்குமுறை ஆட்சியை நடாத்தி வருகின்ற இலங்கை அரசின் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்சவையும், இனஅழிப்பு அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் பட்டதிருவிழாவிற்கு பிரதம விருந்தினராக அழைப்பதானது, எமது இனத்திற்கு நாமே இழைக்கும் வரலாற்றுத் தவறென்பதை நாம் அடையாளப்படுத்த விழைகிறோம்.

ஈழத்தமிழரின் சிறப்புமிகு பண்பாட்டு நிகழ்வான பட்டத்திருவிழா, காலம்காலமாக தொடர்ச்சியாக நடாத்தப்படவேண்டுமென்பதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆனால், தமிழினத்தின் வாழ்வைச் சிதைத்தவர்களை நாமே அழைத்து பட்டத்திருவிழாவை நடாத்துவதென்பதை எவ்விதத்திலும் ஏற்கவியலாதென்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

எனவே தயவுகூர்ந்து, இந்நிகழ்வின் ஏற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்தி, இதுவரைகாலமும் நடாத்தியது போலவே நடாத்துமாறு வேண்டுகிறோம்.

அவ்வாறு நடாத்துவதற்கு அனுமதியில்லையெனின் இவ்வருடம் பட்டத்திருவிழாவை நடாத்தாமல் இடைநிறுத்துவதே மேன்மையாகும். – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *