ஜனவரி 20ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்படுமா? அரசின் கைகளில் பதில்! ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் எமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழில் சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எமது நீண்டகால பிரச்சினையாக காணப்பட்ட சம்பள முரண்பாட்டை தீர்ப்பதாக அரசு கூறியுள்ளது. அத்துடன் நவம்பர் 20 ம் திகதி ஆசிரியர் சேவையை மூடிய வகுதிக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால், இன்று வரை சம்பள முரண்பாட்டை பகுதியாக தீர்ப்போம் என கூறிய அரசு, இன்னமும் அது தொடர்பாக வர்த்தமானியை வெளியிடவில்லை.

அரசு கூறியது போன்று ஜனவரி மாதம் 20ஆம் திகதி மூன்றில் ஒரு பங்கு சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால், ஜனவரி 5ஆம் திகதி அதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட வேண்டும். இன்று வரை குறித்த செயற்பாடு நடைபெறவில்லை.

கடந்த 24 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இம்மமுறை அரசு தாம் வழங்கிய வாக்குறுதியை சம்பள அதிகரிப்பில் காட்டவில்லை என்றால் நாம் பாரிய தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

2010ஆம் ஆண்டு 3 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அன்று நாடகம் ஆடியது. ஆனால் இம்முறை அது பலிக்காது. அரசு தற்போது தேவையில்லாமல் தங்களுக்காக சொந்த ஆடம்பரத்துக்காக செலவழித்து ஊழல் பட்டியலில் இணைந்துள்ளனர்.

பொருளாதார கொள்கை இல்லாமல் தான் நாட்டு இப்போது பாதாளத்தை நோக்கி செல்கிறது. அதேவேளை படித்தவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தாமல், இராணுவத்தை அரச நிர்வாக கட்டமைப்பில் கொண்டு வந்துள்ளமையால் நாடு இராணுவ ஆட்சிக்குள் சென்றுள்ளது.

தங்களுடைய விடயங்களை மூடி மறைப்பதற்காக, மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளனர். மாதம் 35 ஆயிரத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். ஆனால், அரசும் அரசு சார்ந்தவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *