
“எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் சம்பள அதிகரிப்பு இல்லாவிடின், பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்” என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நீண்டகால பிரச்சினையாகக் காணப்பட்ட சம்பள முரண்பாட்டை, பகுதிபகுதியாகத் தீர்ப்போம் என அரசு கூறியிருந்தது. ஆனால், இன்றுவரை அது தொடர்பான வர்த்தமானியை வெளியிடவில்லை.
அரசு கூறியது போன்று ஜனவரி மாதம் 20ஆம் திகதி மூன்றில் ஒரு பங்கு சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால், ஜனவரி 5ஆம் திகதி அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட வேண்டும். இன்றுவரை குறித்த செயற்பாடு நடைபெறவில்லை.
24 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்தமுறை தாம் வழங்கிய வாக்குறுதியை சம்பள அதிகரிப்பில் காட்டவில்லை என்றால், நாம் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
அரசு தற்போது தேவையில்லாமல், சொந்த ஆடம்பரத்துக்காக செலவழித்து வருகிறது. பொருளாதாரக் கொள்கை இல்லாமல்தான் நாடு இப்போது பாதாளத்தை நோக்கிச் செல்கிறது. அதேவேளை, படித்தவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தாமல், இராணுவத்தை அரச நிர்வாகக் கட்டமைப்பில் கொண்டு வந்துள்ளமையால் நாடு இராணுவ ஆட்சிக்குள் சென்றுள்ளது.
அரசு, தங்களுடைய விடயங்களை மூடிமறைப்பதற்காக மக்களைத் துன்பத்தில் தள்ளியுள்ளது. மாதம் 35 ஆயிரம் ரூபாவை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? ஆனால், அரசும் அரசு சார்ந்தவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்=என்றார்.
….





