வாழைச்சேனையிலிருந்து, யாழ். நகருக்கு வந்து தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருடிய தொலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது.
அதுதொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
யாழ். தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, காவல் பரிசோதகர் றில்ரோக் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் வாழைச்சேனை சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரிடமிருந்த திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் 6 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






