இலங்கையில் தீவிரமடைந்த ஒமிக்ரான்; பூஸ்டரை விரைவுபடுத்தக் கோரிக்கை!

இலங்கையில் ஒமிக்ரான் திரிபு பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில், வேகமாக பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி தொற்று நோயில் இருந்து மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

குறிப்பாக கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவையை தவிர்ப்பதில் பூஸ்டர் தடுப்பூசி பங்களிப்புச் செய்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் ஆபத்தான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையை தவிர்ப்பதில் பூஸ்டர் தடுப்பூசி 88வீதம் பயனுள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

முதல் கொரோனாத் தடுப்பூசி மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் அபாயத்தை 52வீதம் குறைக்கிறது. இரண்டாவது தடுப்பூசி 72 வீதம் ஆக பாதுகாப்பை அதிகரிக்கிறது.

எனினும் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 25 வாரங்களுக்குப் பின்னர் அதன் பாதுகாப்பு செயல்திறன் 52 வீதம் ஆக குறைந்துள்ளமையும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பின்னர் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டாலும் கூட 88சதவீதம் பேருக்கு மருத்துவமனை அனுமதி தேவைப்படவில்லை எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என்று எதிர்வு கூற முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்துள்ளார்.

இது ஒமிக்ரான் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதற்கான சிறந்த சான்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்Nhன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களுக்கே ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

ஒமிக்ரான் தொற்றுக்குள்ளான 48 பேரில் 7 பேர் வெளிநாட்டு பிரஜைகளாவர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளினூடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே ஒமிக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஆய்வு முடிவுகளில்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களில் 12 வீதமானவர்கள் ஒமிக்ரான் தொற்றாளர்களாக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் பாதிப்பைத் தடுக்க பூஸ்டர் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தலைவர்கள் நழுவ விடக்கூடாது! சிவசக்தி ஆனந்தன் பகிரங்க வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *