நாட்டில் மருந்துக்கும் தட்டுப்பாடா? டொலர் பிரச்சினை!

வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதிலும் சில பாதிப்புகள் ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எப்போதும் சுகாதார துறைக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், நாட்டில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடன் பத்திரங்களுக்கு பணத்தை செலுத்தும் போது, குறிப்பாக மருந்துகளுக்கு முக்கியத்துவத்தை வழங்குமாறு, வரையறுக்கப்பட்ட அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அப்படியில்லை என்றால், நாட்டில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் எனவும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எனினும், டொலர் கையிருப்பில் இல்லாத பிரச்சினையால், அரிசி, சீனி உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் மிகப் பெரிய தடை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *