நாடு நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டிருக்கும்போது அரசாங்கம் பயணிக்கும் விதமானது பயங்கரமாகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வரலாற்றில் என்றுமில்லாதளவு, எமது நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயச் செய்கைக்கு போதிய உரம் இல்லை.
இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் தற்போது காணப்படுகின்றன. இவற்றை தீர்த்து வைப்பதற்கு எமது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை.
நமது நாட்டில் பாரிய நெருக்கடிகள் நிலவி வருகின்ற நிலையில் அரசாங்கம் பயணிக்கும் விதமானது மிக பயங்கரமாக உள்ளது.
ஏனெனில், நாட்டில் நிலவும் எந்த பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி பதில் கூறுவதில்லை. பொறுப்பெடுப்பதும் இல்லை.
நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும்போது ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்புக்களை தட்டிக்கழிக்கின்றனர்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது எவ்வாறான கதைகளைக் கூறியது என்று யாவரும் அறிந்ததே.
நமது நாட்டில் சிறந்த தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ என்று கூறினர். அவர் மிகச் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்து வருகின்றார் என்று கூறினர்.
ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நாட்டை எவ்வாறு சீரழித்துள்ளனர் என்பது தற்போது தெரிகின்றது.
ஒவ்வொரு கதைகளைக் கூறி மக்களை முட்டாள்களாக்கிய தலைவர்கள் தற்போது எங்கே? அவர்களும் அரசாங்கத்துக்குள்ளே இருக்கின்றனர்.
இந்த அரசாங்கம் தொடர்பில் நற்சான்று பத்திரம் சமர்ப்பித்தி விமல் வீரவன்ச போன்றவர்களால் அரசாங்கத்திலிருந்து வெளியேற முடியுமா?
பொய்களைக் கூறிகூறி இந்த அரசாங்கத்தை அமைத்தவர்கள் இன்று சாதாரண அரசாங்கம் போன்று செயற்படுகின்றனர்.
நாட்டில் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு இல்லை. நினைத்த நேரத்தில் பொருட்களுக்கான விலை அதிகரிக்கின்றது. அரிசி விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானிக்கின்றனர். மரக்கறிகளின் விலை தொகை விற்பனையாளர்கள் தீர்மானிக்கின்றனர்.