கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தினை வழிமறித்த தனியார் பேரூந்தினர் இ.போ.சபை பேரூந்தின் நடத்துனர் மற்றும் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான இ.போ.சபை பேரூந்து கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து இன்று காலை 6.10 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது.
குறித்த பேரூந்து பயணத்தினை ஆரம்பித்த அதே நேரத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தும் கிளிநொச்சி நகரை வந்தடைந்தது.
இதன் போது பயணிகளை ஏற்றுவதில் இரு பேரூந்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் கரடிபோக்கு பகுதியினை இ.போ.சபை பேரூந்து அண்மித்த சமயத்தில் குறித்த பேரூந்தினை வழிமறித்த தனியார் பேரூந்தினர் இ.போ.சபை பேரூந்தின் நடத்துனர், சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.
அதன்படி, தாக்குதலுக்குள்ளாகிய இ.போ.சபை சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
