சீன நாட்டின் அடிமை நாடாகவன்றி எம்மால் தனித்தியங்க முடியாமல் போய்விடும்-விக்கி

காலத்திற்குக் காலம் எமது கடன்களை இடைவிடாமல் திருப்பிக் கட்டி வந்த நாங்கள் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோம் என க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனை கடத்த 3ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2020ம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை மீதான விவாதத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

சர்வதேசக் கடனை உரியவாறு உரிய நேரத்தில் கட்டாது விட்டால் அது மற்றைய சகல கடன்களையும் பாதிக்கும். அவ்வாறு நடந்தால் அது மிகப் பெரிய ஆபத்தாக உருவெடுக்கும்.

உண்மையில் எமக்குக் கடன்தர எவரும் முன்வரமாட்டார்கள். சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாகவன்றி எம்மால் தனித்தியங்க முடியாமல் போய்விடும்.

சீன கம்யூனிசக் கட்சியின் 100 வது வருடத்தை முன்னிட்டு நாங்கள் தங்க நாணயங்களை வெளிக் கொண்டு வருகின்றோம். ஏற்கனவே பல நிறுவனங்களின் முன் ஆங்கில, தமிழ் ஏன் சிங்கள மொழி கூடப் பாவிக்கப்படாமல் சீன மொழியில் மட்டும் பெயர்ப்பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை எமக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தான் இவ்வாறான செயல்களில் நாம்; ஈடுபடுகின்றோமோ நான் அறியேன்.

ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் பூகோள அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி சிந்தித்தோமா? முகத்தைப் பகைத்து மூக்கை வெட்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.

முக்கியமாக எமக்குக் கவலையளிக்கும் ஒரு விடயந்தான் எமது மீண்டுவரும் கடன்களை அரசாங்க வருமானத்தைக் கொண்டு அடைக்க முடியாமல் இருப்பது.

2020ல் கொண்டு வரப்பட்ட வரிக் கொள்கை அரச வருமானத்தை வெகுவாகக் குறைத்தது. பொது மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தும் தற்போதைய வாழ்க்கைச் செலவின் அபரிமிதமான அதிகரிப்பானது குறித்த வரிக் கொள்கையின் நன்மைகளை மக்களுக்குக் கிடைக்கப் பண்ணாமல் ஆக்கிவிட்டது. பொருளாதார விருத்தியின்றி அரச திறைசேரி சதா காலமும் நெருக்குதலுக்கு இலக்காகி நிற்கின்றது.

இவ்வாறான நிலையில் எமது கடன்களை அடைக்கப் போதுமான வருமானங்களை எம்மால் பெறமுடியாதிருப்பதால் மாதச் சம்பளங்களைக் கூடக் கட்ட முடியுமோ என்ற நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம்.

ஆகவே அரசாங்கம் தொடர்ந்தும் கடன் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலேயே தற்போது இருக்கின்றது. நாங்கள் கடன் பொறி ஒன்றில் அகப்பட்டுள்ளோம். ஆனால் அதில் இருந்து மீள வழிதேடாமல் இப்பொழுதும் அரசியல் பேசிக் கொண்டே காலம் கடத்திவருகின்றோம்.

அண்மையில் ஊடகங்களுக்கு செய்தி ஒன்றை கூறிய கெஹெலிய இரம்புக்வெல, ‘அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர்களை கடன் அடைப்பதற்காகக் கட்டியுள்ளது என்பதில் பெருமை அடைகின்றேன்’ என கூறினார். ஆனால் அவர் மிகுதி இருக்கும் 34 பில்லியன் கடன் அடைக்க வேண்டிய தொகையை எப்பொழுது கட்டப் போகின்றார் என்பது பற்றிக் கூறவில்லை.

எமது அந்நிய செலாவணி குறைந்துள்ளது அல்லவா? இப்படியே போனால் எம்மால் பெற்றோலையும் டீசலையும் இறக்குமதி செய்யக்கூட முடியாமல் போய்விடும் என தெரிவித்தார்.
முன்னொரு காலத்தில் கலாநிதி ற.தகநாயகா அவர்கள் பெற்றோல் விலையைக் கூட்டியமையால் மாட்டு வண்டியில் பாராளுமன்றம் வந்தார். ஆனால் தற்போதைய நிலை அதிலும் மிக மோசமானது. கையில் பணம் இருந்தால்கூட வாங்குவதற்குப் பெற்றோலோ டீசலோ இருக்காது.

பட்டினி, கடன், மன உளைச்சல் என்ற நெருப்பு எமது மக்களைத் தாக்கும் நிலையிலும் நாம் நீரோ மன்னர் பிடில் வாசித்தது போல் இன்று நடந்து கொண்டு செல்கின்றோம்.

எங்களுக்கு சேதன உரமே தேவை என்று கூறி நாம் அசேதன உர இறக்குமதியை நிறுத்திக் கொண்டோம். ஆனால் அவ்வாறான ஒரு காரியம் மக்களை இரசாயன உரங்களில் இருந்து பாதுகாக்கவல்ல எடுக்கப்பட்டது. எமது டொலர்களைச் சேமிக்கவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் வழமைபோல் அதற்கான காரணம் தேசப்பற்றின் வெளிப்பாடே என்று கூறப்பட்டது.

அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து நெல்லினை இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அந்த நாடுகளில் இதே இரசாயன உரம் பாவித்தே பயிர்ச் செய்கை நடைபெறுகின்றது. அப்படியானால் உர இறக்குமதியின் காரணம் மக்கள் நலம் அல்ல டொலர்களின் போதமையே என்று புலப்படுகின்றது.

வடமாகாணத்தை எடுத்தோமானால் அசேதன உர இறக்குமதி தடை செய்யப்பட்டதானது நீண்ட காலப் பாதிப்பை எமது மாகாணப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப் போகின்றது என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது.

ஏற்கனவே எமது மாகாண உள்நாட்டு மொத்த உற்பத்தியானது ( புனுP ) 2019ல் 4.7 சதவீதமாக இருந்தது. போரின் பின்னர் பாரிய பாதிப்பை எம் மக்கள் சந்தித்து வரும் வேளையில் இவ்வாறான இறக்குமதித் தடை பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது.

அது மட்டுமல்ல, போரின் பின்னர் தொடர்ந்து படையினர் வடமாகாணத்தில் முகாம் கொண்டு இயங்குவதால் எமது விவசாய நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளை மேலும் நஷ்டத்திற்குள் ஆழ்த்தும் விதமாக படையினர் வடக்கு கிழக்கில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமக்கு அரசால் வழங்கப்படும் பல உதவிகளால் சகாயங்களால் மானியங்களினால் படையினர் பயிர்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது.

ஆனால் விவசாயி அப்படி அல்ல. பல சிக்கல்களின் நடுவே விளைச்சல் உண்டு பண்ணுகின்றார்கள். அதன் பின்னரும் அவர்களுக்கு சந்தைப்படுத்தலில் பாரிய குறைபாடு உண்டு. எமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தப் போதுமான திட்டமிடுதல் இதுகாறும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

புதிய விவசாய அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து எமது விவசாயிகளின் விளை பொருட்களை உரியவாறு சந்தைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது வடமாகாண பொருளாதாரம் ஒரு வித தேங்கு நிலையில் உள்ளது. தமிழ் மொழி தெரிந்த அமைச்சர் அளுத்கமகே அவர்கள் விரைவில் எமது விவசாயிகளின் நிலையை மேன்மையுறச் செய்வார் என்று நம்புகின்றேன்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரு தரப்பு சிங்கள நண்பர்களிடமும் ஒரு வேண்டுகோளை பல தடவைகள் நான் முன்வைத்து வந்துள்ளேன். அதாவது தமிழ் மக்களை உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கி எமது புலம் பெயர் மக்களின் முதலீடுகளுக்கு வழி அமையுங்கள் என்று கேட்டுள்ளேன்.

மீண்டும் ஒரு முறை எமது சிங்கள பௌத்த அறிவுசால் சமூகத்திடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். தமிழர்களையும் முஸ்லீம்களையும் உங்கள் அந்தரங்கத்திற்குள் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்து போதிய முதலீடுகளை நாட்டிற்குள் வரவழையுங்கள். இதன் மூலமாக எமது அந்நியச் செலாவணிப் பிரச்சனைகளை நாங்கள் விரைவில் தீர்த்துக் கொள்வோமாக! இந்த நாட்டைக் காப்பாற்ற நாம் யாவரும் இணைய வேண்டிய முக்கிய தருணம் இது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *