சீன சந்தையில் தீ விபத்து: தீயணைப்பு வீரரொருவர் உட்பட 9பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டேலியன் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சந்தைக்கு கீழே நிலத்தடியில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால், காற்றின் வேகம் காரணமாக தீ மேலும், பரவியதால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது. எனினும் சுமார் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பின் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வராத நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *