
வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாட்டை குறைந்தது நான்கு வாரங்களுக்கு மூடிவிட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார அமைப்பு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.
நாளாந்தம் கிட்டத்தட்ட 3,000 கொரோனா தொற்றுக்கள் பதிவாவதுடன், மரணங்களின் எண்ணிக்கை நளாந்தம் 100 ஐ நெருங்குகிறது.
அத்துடன், கடந்த 13 நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட ஆயிரம் கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளும் கொரோனாவால் மரணித்தோரின் சடலங்களால் நிரம்பியுள்ளன என்பதுடன் வைத்தியசாலைகளின் விடுதிகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில், வைத்தியசாலைகளின் திறன் தாங்க முடியாததால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.