தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டோரை கண்டறிய கணக்கெடுப்பு

மேல் மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து அவர்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு அழைத்துவந்து அல்லது அவர்களது வீடுகளுக்கு சென்று தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட பலர் இதுவரை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என சுகாதார அமைச்சுக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையே, முதலாவது தடுப்பூசியை பெறாத மேல் மாகாணத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்காக இன்று (10) முதல் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (10) முதல் 03 நாட்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, 1906 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, இத்தகையோர் தொடர்பான தகவல்களை பதிவு செய்யுமாறு அரசாங்க தகவல் திணைக்களம், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *