மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ.சுமந்திரன் எனவும், அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று மாலை சமகால அரசியல் தொடர்பில் நடாத்திய விசேட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தற்போது தமிழ் பேசும் கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் அது தொடர்பில் கையாளப்படும் ஆவணங்கள் கூட எமக்கு காண்பிக்கப்படவில்லை.
இவ்வாறு தான் 1987 ஆண்டு கூட இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லீம் தரப்பிற்கு சரியாக காட்டப்படாது, செய்யப்பட்டது.
13ஆவது சீர்திருத்த சட்ட மூலத்தை தலைவர் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லீம்களும் முழுமைகாக எதிர்த்தனர். தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பார்வைக்காக வழங்கப்படவில்லை.
இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே இது தொடர்பாக வீண் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும். இது தொடர்பில் நான் மக்களுக்கு உண்மையை சொல்ல தயங்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.