ஆஸியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது பங்களாதேஷ் அணி!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரை முதல் முறையாக வென்று, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி சாதித்துள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பங்களாதேஷ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையை பதிவுசெய்துள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நய்ம் 23 ஓட்டங்களையும் மொஹமதுல்லா 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், நாதன் எலீஸ் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டர்னர், அகர் மற்றும் ஸம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 13.4 ஓவர்கள் நிறைவில் 62 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்மூலம் அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிக்கெதிராக பங்களாதேஷ் அணி முதல் முறையாக ரி-20 தொடரொன்றை வென்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் 22 ஓட்டங்களையும் பென் மெக்டர்மோட் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் சய்பூதின் 3 விக்கெட்டுகளையும் நசும் அஹமட் 2 விக்கெட்டுகளையும் மொஹமதுல்லா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *