
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும், வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும் என்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன நாட்டில், வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டை முழுமையாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை. எனினும், தேவைப்படும் போது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.