
இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவை இதனை கூறியுள்ளார்.
நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “தற்போது உள்ளூர் சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது”.