கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் இன்னும் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
6 இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அவர்களில் ஒரு இலட்சத்து 69 ஆயிரம் பேர் அழகியல் கற்கைகளைத் தெரிவுசெய்துள்ளனர்.
அவர்களுக்குச் செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட வேண்டியுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக செயன்முறைப் பரீட்சைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்தச் செயற்பாடுகளில் இருந்தும் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாகவே, க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.