குற்றச் செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி சடலத்துடன் போராட்டம்!

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி,
சடலத்தை வீதியில் வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குற்றவாளிகளைக் கைது செய்து குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி, இன்று காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி பரந்தன் ஏ-9 வீதியை மறித்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

பரந்தனில் கொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்திவரை சென்றது. தொடர்ந்து குறித்த பகுதியில் ஏ-9 வீதியை மறித்து இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பலர் இணைந்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் போராட்டத்தை நிறுத்துமாறு கோரியுள்ள போதும் பொதுமக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. பின்னர் பொலிஸார் அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *