ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

வவுனியா ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்திற்கு ஆளுமையுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பெற்றோர் சமூகத்தால் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தபோது,

எமது பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இடமாற்றமாகி சென்றிருந்தார். இந்நிலையில் பிரதி அதிபர் பதில் அதிபராக கடமையாற்றி வந்திருந்தார்.

தற்போது புதிய அதிபர் ஒருவர் நாளையதினம் கடமையினை பொறுப்பேற்று கொள்ளவுள்ளதாக அறிகின்றோம். குறித்த அதிபர் 35 பிள்ளைகளை கொண்ட பாடசாலையினை இதுவரை நிர்வகித்து வந்துள்ளார்.

ஆனால் எமது பாடசாலையில் 480இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்விகற்று வருகின்றனர். எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஆளுமையுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

கல்வித்திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து அரசியல் தலையீடுகளை தவிர்த்து தீர்மானங்களை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசியல் வாதிகளே வளர்ந்துவரும் எமது பாடசாலையை நாசமாக்க இடம் கொடுக்காதீர்கள், பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்காதே, பெற்றோரின் கோரிக்கைக்கு காது கொடு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *