யாழில் நால்வருக்கு மலேரியா தொற்று!

யாழ். போதனா மருத்துவமனையில் மலேரியாத் தொற்றுடன் நேற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு, பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இவர், சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளுக்கு அண்மையில் சென்றுள்ளார். இது ஓர் ஆபத்தான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது என்று, யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டமை தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவிக்கையில்,
நமது நாட்டிலிருந்து பலர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகச் செல்வதற்கு எத்தனிக்கின்றனர். அவர்கள் அங்கு செல்வதற்காக முதலில் ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார்கள்.அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கான பயணங்கள் தடைப்பட்டதும் மீண்டும் திருட்டுத்தனமாக எமது நாட்டுக்குள் வருகின்றார்கள். இவர்கள் மலேரியா உள்ள இடத்திலிருந்து வருகின்றார்கள்.அவர்களுக்கு அந்த நாடுகளில் சிலவேளை மலேரியா காய்ச்சலும் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு வருபவர்கள் மீண்டும் எமது பிரதேசத்தில் மலேரியாவை தோற்றுவிக்கின்றார்கள்.

மிக அண்மையில் 3 மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இது பெரும் அபாய நிலைமை. எனவே, நாங்கள் எமது மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.காய்ச்சல் இருக்கும் வேளையில் அவர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டால் மலேரியா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.தற்போது மலேரியா நோய் இனங்காணப்பட்டதால், மலேரியா கிருமியானது ஒருவரில் குறைந்தது 21 நாள்கள் வரை இருக்கலாம். அத்துடன் நுளம்பிலும் 21 நாள்கள் வரை இருக்கலாம்.

எனவே, 21 நாள்களுக்கு நாங்கள் எமது சுற்றாடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக மலேரியா கிருமி எமது சமூகத்தில் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.குறிப்பாக, கொரோனாத்தொற்றுக்குப் பின்னர் பல நாடுகளில் மலேரியா கண்டறியப்பட்டுள்ளது. = என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *