மட்டு. இருதயபுரத்தில் வடிகான் அமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரத்தில் வடிகான் அமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருதயபுரம் மேற்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள் இன்று (புதன்கிழமை) காலை இருதயபுரம் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மைதானத்திற்கு அருகில் நீண்டகாலமாக வடிகான் அமைத்துதருமாறு கோரிக்க விடுத்துள்ளபோதிலும் இதுவரையில் வடிகான்கள் அமைக்கப்படாமல் வீதியொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதிவேண்டாம் எங்களுக்கு வடிகானே வேண்டும்,அரச அதிகாரிகளே கள விஜயம் செய்வதில்லையா போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக இப்பகுதி வெள்ளத்தில் மூழ்குவதாகவும் இதன் காரணமாக 800க்கும் அதிகமான குடும்பங்கள் மழை காலங்களில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வெள்ளநீர் வழிந்தோடும் வகையில் வடிகான்களை அமைத்துதருமாறு கோரிக்கை விடுத்துவருகின்றபோதிலும் இதுவரையில் வடிகான் அமைக்கப்படாமல் வீதி அமைப்பதை அனுமதிக்கமுடியாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பூபால்ராஜா உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *