
மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசுக்குள் கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல, வெளிநாடுகளிலிருந்து அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை -என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“விரைவில் மாகாணசபைத் தேர்தல் வருகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அரசால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஊகமாக வைத்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கலாம். தேர்தல் தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகளிலிருந்து அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. அவ்வாறு பிரயோகிக்கப்பட்டாலும் அதற்கு அடிபணியும் கலாசாரம் எம்மிடமில்லை.
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால நிவாரணத்தை வழங்கும் நோக்கிலேயே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.” – என்றார்.