
அரசாங்கத்தை விமர்சிக்கும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தமது பதவிகளை துறந்துவிட்டு அதனை செய்யலாம். ஆனால், அரசுக்குள் இருந்துகொண்டே அரசை விமர்சிப்பதில் நியாயமில்லை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை உள்ளிருந்துகொண்டே விமர்சிப்போரை பதவிகளில் இருந்து நீக்க முழு அதிகாரமும் எனக்கு உண்டு.
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டின்
முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடந்தபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக அறியமுடிந்தது.
அமைச்சரவைக் கூட்டத்தின் இடையில் 49 ஆம் இலக்கம் அமைச்சரவைப் பத்திரத்தை வாசித்த ஜனாதிபதி, அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள விசேட நிவாரணப் பொதி அடங்கிய நிதி அமைச்சரின் அமைச்சரவைப் பத்திரம் தொடர்பிலும் குறிப்பிட்டார்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் இவ்வாறான நிவாரணப் பொதியை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்தபோது, அரசாங்கத்தை பாராட்டுவதை விடுத்து அரச பிரமுகர்கள் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதக நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தமை தொடர்பில் ஜனாதிபதி இந்த அமைச்சரவை கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டதாக அறியமுடிந்தது.
உணவு நெருக்கடிக்கு காரணமான அமைச்சர்களும் கொள்கை வகுப்பாளர்களுமே பொறுப்பு என்றும், நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வுகாண வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் அவற்றைத் தீர்ப்பது வேறு குழுவின் கையில் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.
பொருட்களின் விலை உயர்வுக்கு வர்த்தக அமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் உணவு அமைச்சர் ஆகியோரே காரணம் என தெரிவித்திருந்த பிரேமஜயந்த, விவசாய அமைச்சர் முழு தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் இதுதொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
நேற்றுமுன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை இலக்கு வைத்து மிகவும் பொறுமையிழந்து பேசிய ஜனாதிபதி, அப்படியானவர்களை பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.