வெலிக்கடை- சிறைப் படுகொலை தீர்ப்பு 12ஆம் திகதி!

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படவிருந்தநிலையில், விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆராச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற விசேட நீதிபதிகள் குழாம் குறித்த வழக்கின் தீர்ப்பை நேற்று அறிவிக்கவிருந்த நிலையில் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 8 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரால் வழக்கின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக்க சம்பத் என்பவர் வழக்குத் தொடரப்பட்ட சந்தர்ப்பத்தில் வௌிநாடு சென்றிருந்தார்.

அவரின்றி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முறைப்பாட்டாளர் தரப்பினரால் அவருக்கு எதிரான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை என சாட்சி விசாரணைகளின் நிறைவில் நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.
அதற்கிணங்க, குறித்த பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்த நீதிபதிகள் குழாம், நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்தது.

2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தாலும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கை தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் சட்டமா அதிபருக்கு காணப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *