அக்கப்பத்தனை வேவர்லி வீடமைப்பு திட்டம், உரிய பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அக்கப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் நல்லாட்சி காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட சுமார் 81 வீடுகள் மின்சாரம், தண்ணீர், பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன.
இதனால் இந்த வீடுகளுக்குச் செல்வதற்கு மக்கள் தயக்கம் காட்டியிருந்தனர்.
ஒரு சிலர் மாத்திரம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் குடியேறி தண்ணீரினை சேமித்து வைத்துக்கொண்டு தங்களது அன்றாட நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் அதிகமானவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாகக் குடியேறவில்லை. அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய்களைச் செலவு செய்து தண்ணீர்,பாதை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் சிவப்பிரகாசம் சச்சிதானந்தன் தெரிவித்தார்;.
குறிப்பிட்ட இந்த வேவர்லி வீடமைப்பு திட்டமானது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பாதை, மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் மக்கள் அந்த வீடுகளுக்குச் சென்று குடியேறவில்லை.
இன்னும் ஓரிரு கிழமைகளில் குறித்த வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.